இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 188 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்துள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் இந்திய அணியுடன் விளையாடி வருகின்றது.
டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலியா ஏற்கனவே 2:1 என்ற கணக்கில் இழந்த நிலையில் இன்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இன்று இந்தியாவை எதிர்கொண்டது.
மும்பை வான்கடே மைதானத்தில் இன்று பிற்பகல் ஆரம்பமான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, இந்திய பந்து வீச்சாளர்களின் ஓவர்களுக்கு தாக்கு பிடிக்க இயலாமல் திண்டாடியது.
இறுதியாக 35.4 ஓவர்களை மாத்திரம் எதிர்கொண்ட நிலையில் 188 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது அவுஸ்திரேலியா.
அணி சார்பில் அதிகபடியாக மிட்செல் மார்ஷ் மாத்திரம் 65 பந்துகளில் 81 ஓட்டங்களை பெற்றார்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் மொஹமட் ஷமி மற்றும் மொஹமட் சிராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டினையும், ஹர்த்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

189 என்ற இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடுவதற்காக இந்திய அணி சற்று நேரத்தில் ஆடுகளம் நுழையவுள்ளது.