பத்திரனவுக்காக வாக்குவாதம் புரிந்த தோனி | கடுமையாக விமர்சித்த ஹார்ப்பர்

11 months ago
Cricket
(1035 views)
aivarree.com

சென்னை சூப்பர் கிங்ஸ் தலைவர் எம்எஸ் தோனியை, ஐசிசியின் முன்னாள் நடுவர் டேரில் ஹார்பர் விளையாட்டின் தாற்பரியத்துக்கு மதிப்பளிக்கவில்லை என்று விமர்சித்துள்ளார்.

சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மே 23, செவ்வாய்க்கிழமை, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2023 தாகுதிகாண் 1 போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் போது, இன்னிங்ஸின் 16வது ஓவருக்கு முன்னதாக தோனி நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன சில நிமிடங்கள் களத்திற்கு வெளியே இருந்தார்.

எனவே களத்திற்கு திரும்பிய பிறகு உடனடியாக பந்து வீச அனுமதிக்கப்படவில்லை.

விதிகளின்படி, எட்டு நிமிடங்களுக்கு மேல் மைதானத்திற்கு வெளியே இருக்கும் எந்த வீரரும் பந்துவீசுவதற்கு முன் அதே நேரத்தை மைதானத்தில் செலவிட வேண்டும்.

இருப்பினும், தோனி திரும்பி வந்த ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு இலங்கை வீரரை மீண்டும் பந்துவீச்சுக்கு கொண்டு வர விரும்பினார்.

மேலும் கள நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இது அவர் நேரத்தை வீணடிக்க முயற்சித்தது போல் இருந்தது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ஸ்பிரிட் ஆஃப் தி கேமை பாதிக்கும் வகையிலும், கள நடுவர்கள் மீது மரியாதையற்று நடந்து கொண்டதாக தோனியை டேரில் ஹார்பர் விமர்சித்துள்ளார்.

‘நிச்சயமாக தோனி தனது விருப்பமான பந்துவீச்சாளருக்கு முக்கியமான பதினாறாவது ஓவரை வழங்குவதற்கு நேரத்தை வீணடித்தார். அந்த ஏமாற்றமான காட்சியிலிருந்து நான் எடுக்கக்கூடிய ஒரே முடிவு இதுதான். கிரிக்கெட்டின் தாற்பரியம் மற்றும் நடுவர்களின் வழிகாட்டுதல்கள் மீது காட்டப்படும் மரியாதையின்மைதான் எனக்குப் பிரச்சினை. கேப்டனுக்கு வேறு வழிகள் இருந்தன, ஆனால் அவை புறக்கணிக்கப்பட்டன’ என்று ஹார்பர் கூறியதாக கூறியுள்ளார்.

71 வயதான அவர் மேலும் கூறுகையில், சிலர் சட்டத்தை விட பெரியவர்களாகவும், வெற்றி பெற எதையும் செய்வார்கள் என்பதும் ஏமாற்றம் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.