ஐ.பி.எல். இறுதி போட்டியின் பின்னர் 2023 ஆசியக் கிண்ணம் தொடர்பான இறுதி முடிவு – பிசிசிஐ

10 months ago
Cricket
(232 views)
aivarree.com

2023 ஆசியக் கிண்ணத்தை நடத்துவது குறித்த இறுதி முடிவு ஐ.பி.எல். இறுதிப் போட்டியின் போது எடுக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

இதில் ஆசிய கிரிக்கெட் சபை (ஏசிசி) முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொள்வார்கள் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வியாழக்கிழமை (25) தெரிவித்தார்.

பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை கிரிக்கெட் சபைகள் அந்தந்த தலைவர்கள் மே 28 அன்று நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் 2023 ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் இது தொடர்பில் விவாதிக்க அழைக்கப்பட்டுள்ளனர்.

2023 ஆசியக் கிண்ணம் தொடர்பான எதிர்கால நடவடிக்கை தொடர்பில் இதன்போது அவர்களுடன் கலந்துரையாடுவோம் என்றும் ஜெய் ஷா கூறினார்.

இருதரப்பு கிரிக்கெட் கடந்த தசாப்தத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அரசியல் உறவுகளில் ஒரு பாதிப்பாக இருந்து வருகிறது.

இப்போது அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் இந்தியா நடுநிலையான இடங்களில் பல அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் நிகழ்வுகளில் மட்டுமே ஒருவருக்கொருவர் விளையாடுகினறனர்.

இந்தியா, பாதுகாப்புக் காரணங்களை மேற்கோள் காட்டி, செப்டம்பரில் ஆசியக் கிண்ணத்துக்காக பாகிஸ்தானுக்குப் பயணம் செய்வதை நிராகரித்துள்ளது மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தங்கள் போட்டிகளை விளையாட அனுமதிக்க முன்வந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இன்னும் இந்த வாய்ப்பிற்கு முறையான பதிலை வழங்கவில்லை என்றாலும், முழு போட்டியையும் பாகிஸ்தானில் இருந்து வெளியேற்ற இந்தியா விரும்புவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கிண்ணம் மற்றும் 2025 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபிக்கு கடுமையான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.