Tamil Sports News

புதிய கழகத்தில் இணைந்தார் ரொனால்டோ

கிறிஸ்டியானோ ரொனால்டோ, 2025 வரை சவுதி புரோ லீக் கழகமான அல்-நாஸ்ர் FCயுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

முன்னாள் மென்செஸ்டர் யுனைடெட், ரியல் மெட்ரிட் மற்றும் ஜுவென்டஸ் வீரரான அவர், முகாமைத்துவத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பால் மென்செஸ்டர் யுனைடட்டிலிருந்து விலகினார். 

வேறு நாட்டில் புதிய கால்பந்து லீகில் விளையாட ஆர்வமாக இருப்பதாக 37 வயதான ரொனால்டோ தெரிவித்துள்ளார். 

ஜுவென்டஸிடம் இருந்து விலகிய அவர் கடந்த ஆண்டு இரண்டு வருட ஒப்பந்தத்தில் மீண்டும் யுனைடெட் கழகத்துடன் இணைந்தார்.  

சிறப்பான முதல் சீசனுக்குப் பிறகு, ஐந்து முறை Ballon d’Or வெற்றியாளரான ரினால்டோவுக்கும், கழகத்தின் புதிய தலைவரான டென் ஹாக்கிற்கும் முறுகல் ஏற்பட்டது. 

ரொனால்டோ மென்செஸ்டர் யுனைடெட் கழகத்துக்காக முதல் ஒப்பந்தத்தில் 292 ஆட்டங்களில் விளையாடி 118 கோல்களை அடித்துள்ளார்.  

இரண்டாவது ஒப்பந்த காலத்தில் 54 ஆட்டங்களில் 27 கோல்கள் அடித்தார்.

உலகக்கிண்ண காலிறுதியில் மொராக்கோவிடம் போர்ச்சுகல் 1-0 என்ற கோல் கணக்கில் தோற்றதால் அவரது உலகக்கிண்ண கனவு முறிவடைந்தது. 

தற்போது அவர் அல்-நஸ்ர் கழகத்துடன் ஆண்டுக்கு 177 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ட் சம்பளத்துடன் அவர் இணைந்துள்ளார். 

Exit mobile version