Tamil Sports News

ஃபிஃபா தலைவராக மீண்டும் கியானி இன்ஃபான்டினோ

சர்வதேச காற்பந்து சங்கங்களின் சம்மேளனமான ஃபிஃபாவின் தலைவராக கியானி இன்ஃபான்டினோ மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

வியாழன் அன்று நடைபெற்ற உலக கால்பந்து நிர்வாகக் குழுவின் காங்கிரஸ் கூட்டத்தில், அவர் போட்டியின்றி 2027 ஆம் ஆண்டு வரை இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டர். 

52 வயதான சுவிஸ் வழக்கறிஞரான அவர் 2016 இல் செப் பிளாட்டருக்குப் பதிலாக ஃபிஃபாவின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். 

மீண்டும் பதவிக்கு நியமிக்கப்பட்டதன் பின்னர் உரையாற்றிய அவர் “என்னை நேசிப்பவர்களையும், என்னை வெறுப்பவர்களையும், நான் நேசிக்கிறேன்,” என்று கூறினார். 

FIFA விதிகளின்படி அதன் தலைவர் ஒருவர் அதிகபட்சமாக நான்கு வருட காலத்தைக் கொண்ட மூன்று தவணைகளுக்கு பதவி வகிக்க முடியும். 

ஆனால் இன்ஃபான்டினோ 2031ஆம் ஆண்டு வரை ஃபிஃபாவுக்கு தலைமை தங்குவதற்கான களத்தைத் ஏற்கனவே தயார் செய்துவிட்டார்.

ஷெப் பிளாட்டருக்கு பதிலாக அவர் ஃபிஃபா தலைவராக தெரிவு செய்யப்பட்டதை, தமது முழுமையான பதவிக்காலமாக கணக்கிட முடியாது என்று அவர் கடந்த டிசம்பரில் அறிவித்தார்.

கடந்த ஆண்டு உலகக் கோப்பையை கட்டார் நடத்தியதை உறுதியாக ஆதரித்த இன்ஃபான்டினோ, ஆண்கள் மற்றும் பெண்கள் உலகக் கோப்பைகளின் விரிவாக்கம் மற்றும் FIFA வருமானத்தில் பெரும் அதிகரிப்பை ஏற்படுத்தியமை போன்றவற்றால் மதிக்கப்படுகிறார். 

Exit mobile version